#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Friday 23 September 2016

முற்றுவினை - வினைமுற்று


 
மங்கை பாடினாள், மயில் ஆடியது.
 
இத் தொடர்களில் ‘பாடினான்’  ‘ஆடியது’  என்னும் வினைச்சொற்கள் செயல் முற்றுப்பெற்றதை உணர்த்துகின்றன. இவ்வாறு, பெயர்ச்சொல்லுக்குத் துணையாக நின்று, தொடரின் பொருளை முடித்துக் காட்டுவது வினைமுற்று - Finite Verb எனப்படும்.
 
வினைமுற்று 1. தெரிநிலை வினைமுற்று, 2. குறிப்பு வினைமுற்று என இரு வகைப்படும்.
 
தெரிநிலை வினைமுற்று
 
ஓவியர் ஓவியம் தீட்டினார்.
 
இத் தொடரில் ‘ஓவியர்’ என்னும் உயர்திணை தெரிகிறது. அவர் ஆண்பால் என்பதும், தீட்டினார் என்பது இறந்தகாலம் என்பதும் தெரிகிறது. மேலும், செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறினையும் வெளிப்படையாகத் தெரிவிக்கிறது. எவ்வாறு எனில்,
 
செய்பவன்
-
ஓவியன்
கருவி
-
தூரிகை, வண்ணம் போல்வன.
நிலம்
-
சுவர் அல்லது திரைச் சீலை
செயல்
-
தீட்டுதல்
செய்பொருள்
-
ஓவியம்
காலம்
-
இறந்த காலம்
இவ்வாறு, ஒரு வினைமுற்று, திணை, பால், காலம் போன்றவற்றையும், வெளிப்படுத்திச் சொல் வடிவை உணர்த்தி, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறினையும் வெளிப்படையாகத் தெரிவிப்பது தெரிநிலை வினைமுற்றாகும்.
 
இத்தகைய தெரிநிலை வினைமுற்றினை உடன்பாட்டு வினைமுற்று,  எதிர்மறை வினைமுற்று என இரண்டாகப் பிரிக்கலாம்.
 
வந்தான், வருகிறான், வருவான்.
-
தெரிநிலை
போகவில்லை, போகமாட்டான், போகாதே.
-
எதிர்மறை வினைமுற்று
குறிப்பு வினைமுற்று
 
மேற்குறித்த ஆறு பொருள்களுள் செய்பவனை (திணை,  பால்)  மட்டும் வெளிப்படையாகக் காட்டுவது, குறிப்பு வினைமுற்றாகும். இதில் காலம் குறிப்பாக வரும்.
 
எழிலன் இனியன்.
 
இதில், இனியன் என்பது குறிப்பு வினைச்சொல். இது தொழிலையும் காலத்தையும் வெளிப்படையாகக் காட்டவில்லை. எனினும், இனிய பண்பை உடையவனாக இருந்தான், இருக்கிறான், இருப்பான் எனக் குறிப்பால் காலத்தை உணர்த்துகிறது.  இவ்வாறு,  செய்பவன் என்பதை மட்டும் வெளிப்படையாக உணர்த்தி, பிறவற்றைக் குறிப்பாக உணர்த்தும் வினைமுற்று, குறிப்பு வினைமுற்றாகும். இது அறுவகைப் பெயர்களின் அடிப்படையில் பிறக்கும்.
 
புகழேந்தி பொன்னன்
-
பொருள்
அங்கையற்கண்ணி மதுரையாள்
-
இடம்
கூத்தரசன் திருவாதிரையான்
-
காலம்
வள்ளல் செங்கண்ணன்
-
சினை
எழிலன் இனியன்
-
பண்பு
அகிலன் நடிகன்
-
தொழில்
குறிப்பு வினைமுற்று இவ்வாறு ஆறுவகைப் பெயர்களின் அடிப்படையில் பிறப்பதை அறிந்துகொள்க.