#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Sunday 20 November 2016

அகப்பொருள்


ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதல் உணர்வை மையமாகக் கொண்டு அகப்பொருள் இலக்கணம் அமைந்துள்ளது. இதில் ஆணைத் தலைவன் என்றும் பெண்ணைத்தலைவி என்றும் கூறுவர். தலைவியின் தோழியும் அகப்பொருள் பாடல்களில் முக்கிய இடம் வகிக்கும் ஒரு பாத்திரம் ஆவாள்.  காதல் பற்றிப் பாடும்போது தலைவன் தலைவி என்று பொதுவாகப் பாடுவார்களே தவிர ஒருவருடைய இயற்பெயரைச் சுட்டிப் பாடுவதில்லை. காதல் உணர்ச்சி எல்லோருக்கும் பொது என்பதால் தனி ஒருவருடைய பெயரைச் சுட்டிப்பாடுவதில்லை. அகப்பொருள் பாடல்கள் நாடகப் பாங்கிலான தன்மை கொண்டிருக்கும். எல்லாப் பாடல்களும் தலைவன், தலைவி, தோழி முதலியவர்களில் யாராவது ஒருவர் கூறுவதாக அமைந்திருக்கும். ஒரே பாடலில் இருவர் மூவர் உரையாடுவது போல இருக்காது. ஒவ்வொரு பாடலுக்கும் திணைதுறைகூறப்பட்டிருக்கும். திணை, நிலம் சார்ந்த ஒழுக்கத்தைக் குறிக்கும். துறை என்பது பாடப்பெற்ற சூழலைக் குறிக்கும். அகப்பொருள் இலக்கணம்திணை அடிப்படையில் அமைந்ததாகும். அகப்பொருள் திணைகள் ஐந்து. அவை,
1. குறிஞ்சித் திணை
2. முல்லைத் திணை
3. மருதத் திணை
4. நெய்தல் திணை
5. பாலைத் திணை
இந்த ஐந்து திணைகளுக்கும் உரிய அகப்பொருள் இலக்கணம் மூன்று வகைப்படும். அவை,
1. முதற்பொருள்
2. கருப்பொருள்
3. உரிப்பொருள்
ஆகியன ஆகும்.
• முதற்பொருள்
நிலம், பொழுது ஆகிய இரண்டும் முதற்பொருள் எனப்படும். உலகில் உள்ள உயிர்கள் தோன்றுவதற்கும், இயங்குவதற்கும் ஆதாரமாக உள்ளதால் இவற்றை முதற்பொருள் என்பர்.
நிலம்
ஒவ்வொரு திணைக்கும் உரிய நிலம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐந்து திணைகளுக்கும் உரிய நிலங்கள் பின்வருமாறு:
குறிஞ்சி-மலையும் மலை சார்ந்த இடமும்
முல்லை-காடும் காடு சார்ந்த இடமும்
மருதம்-வயலும் வயல் சார்ந்த இடமும்
நெய்தல்-கடலும் கடல் சார்ந்த இடமும்
பாலை-பாலை நிலமும் பாலை நிலம் சார்ந்த இடமும்
தமிழ்நாட்டில் உள்ள நிலப்பகுதி இவ்வாறு ஐந்து திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
பொழுது
பொழுது என்பது காலம் என்று பொருள்படும். பொழுது சிறு பொழுது, பெரும்பொழுது என்று இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
சிறு பொழுது
சிறுபொழுது என்பது ஒரு நாளின் காலப் பிரிவுகள் ஆகும். சிறுபொழுது பின்வருமாறு அமையும்.
வைகறை-விடியற்காலம்
காலை-காலை நேரம்
நண்பகல்-உச்சி வெயில் நேரம்
எற்பாடு-சூரியன் மறையும் நேரம்
மாலை-முன்னிரவு நேரம்
யாமம்-நள்ளிரவு நேரம்
சிறுபொழுது ஆறும் ஒரு நாளின் ஆறு கூறுகளாக இருப்பதை அறியலாம்.
பெரும்பொழுது
பெரும்பொழுது என்பது ஓர் ஆண்டின் காலப்பிரிவு ஆகும்.ஆண்டில் உள்ள பன்னிரண்டு மாதங்களையும் ஆறு பிரிவுகளாகப் பிரிப்பர். இது நீண்ட காலப் பிரிவாக இருப்பதால் பெரும்பொழுது எனப்படுகிறது. ஆண்டில் உள்ள பன்னிரண்டு மாதங்களும் பின்வருமாறு ஆறு பெரும் பொழுதுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
சித்திரை, வைகாசி-இளவேனில் காலம்
ஆனி, ஆடி-முதுவேனில் காலம்
ஆவணி, புரட்டாசி-கார் காலம்
ஐப்பசி, கார்த்திகை-குளிர்காலம்
மார்கழி, தை-முன்பனிக் காலம்
மாசி, பங்குனி-பின்பனிக் காலம்
சிறுபொழுது, பெரும்பொழுது ஆகியவற்றை இவை இவை இந்தத் திணைகளுக்கு உரியவை என்று பிரித்து வைத்துள்ளனர்.
திணைபெரும்பொழுதுசிறுபொழுது
குறிஞ்சிகுளிர்காலம், முன்பனிக்காலம்யாமம்
முல்லைகார்காலம்மாலை
மருதம்ஆறு காலமும்வைகறை
நெய்தல்ஆறு காலமும்எற்பாடு
பாலைமுதுவேனில், பின்பனிநண்பகல்
ஒவ்வொரு நிலத்திற்கும் மேலே குறிப்பிட்ட காலங்கள்சிறந்தனவாக இருக்கும் என்பதால் இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது.
• கருப்பொருள்
நிலமும் பொழுதும் ஆகிய இரண்டு முதற்பொருள்கள்அத்திணையில் உள்ள சூழலைத் தீர்மானிக்கின்றன. இவற்றின்காரணமாக ஒவ்வொரு திணையிலும் சூழல் வேறுபட்டுள்ளது. ஒவ்வொரு திணையிலும் வாழும் மக்கள், அவர்களின் தொழில், உணவு, பொழுதுபோக்கு, அந்த நிலத்தில் உள்ள மரங்கள், பறவைகள், விலங்குகள், நீர்நிலை முதலியவற்றைக் கருப்பொருள் என்கின்றனர். கருப்பொருள், பாடல்களில் பின்னணியாகச் செயல்படுகின்றது. எடுத்துக்காட்டாகக் குறிஞ்சித் திணைக்கு உரிய கருப்பொருள் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
குறிஞ்சித் திணையின் கருப்பொருள்கள்
1தெய்வம்-முருகன்
2தலைமக்கள்-வெற்பன், கொடிச்சி
3மக்கள்-குறவர், குறத்தியர்
4பறவை-கிளி, மயில்
5விலங்கு-புலி, யானை
6ஊர்-சிறுகுடி
7நீர்நிலை-அருவி, சுனை
8பூ-வேங்கை, குறிஞ்சி
9மரம்-தேக்கு, அகில்
10உணவு-மலைநெல், தினை
11பறை-தொண்டகம்
12யாழ்-குறிஞ்சி யாழ்
13பண்-குறிஞ்சிப் பண்
14தொழில்-தேன் எடுத்தல், வெறியாடல்
இவ்வாறே ஏனைய திணைகளுக்கும் கருப்பொருள்கள் சொல்லப் பட்டுள்ளன.
• உரிப்பொருள்
ஒவ்வொரு திணைக்கும் உரிய பொருளை உரிப்பொருள் என்பர். உரிப்பொருள் திணைக்கு உரிய முக்கிய உணர்ச்சியைக் குறிக்கிறது. ஐந்து திணைகளுக்கும் உரிப்பொருள் பின்வருமாறு:
குறிஞ்சி-புணர்தல்-தலைவனும் தலைவியும் ஒன்று சேர்தல்.
முல்லை-இருத்தல்-தலைவி, பிரிவைப் பொறுத்துக் கொள்ளுதல்.
மருதம்-ஊடல்-தலைவனிடம் தலைவி பிணக்குக் கொள்ளுதல்.
நெய்தல்-இரங்கல்-தலைவி பிரிவுக் காலத்தில் வருந்துதல்.
பாலை-பிரிவு-தலைவன் தலைவியை விட்டுப் பிரிதல்.
இவ்வாறு எல்லாத் திணைக்கும் முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் சொல்லப்பட்டிருக்கின்றன. திணை, நிலத்தை அடிப்படையாகக் கொண்டது. மற்றபடி உள்ள காலம், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவை அந்தந்த நிலங்களுக்குச் சிறப்பாக அமையக் கூடியவை ஆகும். எல்லா நிலங்களுக்கும் சிறுபொழுது, பெரும்பொழுது ஆகியவை பொதுவானவையே. ஆயினும் ஒவ்வொரு திணைக்கும் உரியதாகச் சொல்லப்பட்டவை அந்தந்தத் திணைக்குச் சிறப்பானவை ஆகும். பறவைகளும் விலங்குகளும் மரங்களும் பூக்களும் மற்ற நிலங்களிலும் இருக்கக்கூடும். எனினும் அந்தந்த நிலங்களுக்கு அவை சிறப்பு வாய்ந்தவை என்பதால் ஒரு திணைக்கு உரியதாக அவை சொல்லப்பட்டுள்ளன. உரிப்பொருள்களும் அவ்வாறே சிறப்புக் கருதிச் சொல்லப்பட்டுள்ளன. அகப்பொருள் இலக்கணம் களவு, கற்பு என்று இரண்டு கூறாகப் பிரிக்கப் பட்டுள்ளது. தலைவன், தலைவி இருவரும் ஒருவரை ஒருவர் பிறர் காணாதவாறு சந்தித்துக் காதல் கொள்ளுவது களவு எனப்படும். திருமணத்திற்குப் பின் உள்ள காதல் வாழ்க்கை, கற்புஎனப்படும். களவிலும் கற்பிலும் தலைவன் தலைவி இவர்களின் உணர்வுகள் எவ்வாறு இருக்கும் என்று விரிவாக இலக்கணம் சொல்லப்பட்டுள்ளது. பொருள் இலக்கண அமைப்பைப் பின்வருமாறு காட்டலாம்.

அகப்பொருள் திணைகள் ஐந்துடன் கைக்கிளை, பெருந்திணைஆகிய இரண்டையும் சேர்த்துச் சொல்லுவது உண்டு. கைக்கிளை என்பது ஆண், பெண் ஆகிய இருவரில் ஒருவர் மட்டுமே காதல் கொள்ளும் ஒருபக்கக் காதல் ஆகும். பெருந்திணை என்பது பொருந்தாத காதல் ஒழுக்கம் ஆகும். கைக்கிளை, பெருந்திணை இரண்டையும் அகப்புறத்திணை என்றும் கூறுவர். கைக்கிளை, பெருந்திணை இரண்டையும் புறப்பொருள் திணைகளாகவும் குறிப்பிடுவர்.